Wednesday, December 17, 2008

கிழக்கில் மரகதம் - திரெங்கானு


திரெங்கானு மாநில கொடி

இதற்குப் முன்பு திரெங்கானு (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய் சொல்லில் இருந்து உருவாகியிருப்பதாக அறியும் வேளையில் மேலும் பல வரலாற்றுப்பூர்வமான குறிப்புகள் இந்த திரெங்கானு சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டையக் கால தமிழர்கள் ‘திரங்கானி’ என்று அழைத்ததாகப் பல வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெற்று திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளது.

‘திரங்கானி’ என்பது வடச்சொல் என்பது கடாரத் தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதியின் கூற்று. இம்மாநிலத் தோற்றம் குறித்த சரியானத் குறிப்புகள் இன்று வரையிலும் கிடைக்கப் பெறவில்லையென்றாலும் சீன நாட்டின் வணிகர் சாவ் சூ குவா (Chao Ju Kua) இம்மாநிலம் அப்போதைய பாலேம்பாங் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1225). அதே வேளையில் ‘நகரகர்த்தகாமா’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பிரபஞ்சா திரெங்கானு மாநிலத்தின் ‘டுங்குன்’ மற்றும் ‘பாக்கா’ மாஜாபாகித் அரசின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1365). இருப்பினும் திரெங்கானு மாநில அரசாட்சியை தொடக்கி வைத்தவர் சுல்தான் ஜைனால் அபிடீன் 1 என்று சரித்திரக் குறிப்புகள் பகர்கின்றன.

தற்போது இம்மாநிலம் 1998ஆம் ஆண்டு தொடங்கி சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் இப்னி அல்மஹ்ருன் சுல்தான் மஹ்மூட் அல்-முக்காஃபி பில்லா ஷா (ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே) அவர்களின் ஆட்சியின் கீழுள்ளது. மற்றொரு உபத்தகவல் மலேசியாவின் தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் (தற்போதைய மாமன்னர்)

தொல்பொருளியலாளர்கள் ‘பேவா’ மலையில் கற்களிலான கோடாரியையும் மண்பாண்டத்தையும் கண்டுப்பிடித்திருப்பதன் வழி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறியவும் முடிகிறது.

திரெங்கானு மாநிலத்தின் தலைவராக சுல்தான் விளங்குகிறார். அதே வேளையில் இம்மாநில மாவட்டங்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கீழுள்ளது. இம்மாநில அரசு இயந்திரத்தை மந்திரி புசார் இயக்குகிறார். இம்மாநிலம் மொத்தமாய் ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவை ஒருங்கே கோலத்திரெங்கானு(மாநிலத்தலைநகர்), கெமாமான், டுங்குன், மாராங், உலுத்திரெங்கானு, செத்தியு மற்றும் பெசுட் ஆகும். 90 விழுக்காடு மலாய்க்காரர்களை மக்களாக கொண்டுள்ளது இம்மாநிலம். மீதி 10 விழுக்காட்டை சீனர்களும் இந்தியர்களும் நிறைவு செய்கின்றனர். ஆனாலும் அந்த பத்து விழுகாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது என் கணிப்பு.

இம்மாநிலம் மீன் பிடித்தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் பெட்ரோல் வழி கிடைக்கும் வருவாய் திரெங்கானு மாநில பொருளாதாரத்திற்கு மேலும் வலுக்கூட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென் சீனக் கடலாகும். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமும் திரெங்கானாகும்.


புலாவ் காப்பாஸ்
அத்தோடு அதிகமான குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட மாநிலமும் இதுவேயாகும். அதனால் என்னவோ இம்மாநிலத்தை கிழக்கில் மரகதம் என்று வர்ணிக்கின்றனர். மொத்தமாய் ஏழு குட்டி தீவுகளை இம்மாநிலம் கொண்டுள்ளது. அதிலும் மிகவும் புகழ்ப்பெற்ற குறிப்பிடத்தக்கவை புலாவ் ரெடாங், புலாவ் காப்பாஸ், புலாவ் பெர்ஹெந்தியான் ரூ, புலாவ் ரூ ஹெந்தியான் மற்றும் புலாவ் தெங்கோல். இங்கு மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு என்று பொருள்படும். அதிக தீவுகளைக் கொண்டுள்ள திரெங்கானு மிக அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தின் காணக் கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.

தஞ்சோங் பிடாரா கடற்கரை

ரங்தாவ் அபாங் கடற்கரை
அதிலும் முக்கியமாக ரந்தாவ் அபாங் கடற்கரையைப் பற்றி இங்குச் சொல்லியே ஆக வேண்டும். கோலத்திரெங்கானுவிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடையே மிக பிரபலம் பெற்றச் சுற்றுலாத்தளமாகும். இதற்கு ஒரே முக்கியக் காரணம் இங்கு முட்டையிட வரும் கடலாமைகள். மிகப் பெரிய கடலாமைகள் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இங்கு முட்டையிட வருகின்றன. இதைக் காணவே அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு திரெங்கானு மிகச் சிறந்த இடமாகும்.
கடலாமை
நாட்டின் மிகத் தொன்மையான அருங்காட்சியகமான திரெங்கானு அருங்காட்சியகம் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. புக்கிட் லோசோங்கில் 27 ஹெக்டர் நிலப்பரப்பில் இது பழைய அரண்மனையின் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலை கலாச்சாரம், கைவினைகள், பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு இலவம்.

திரெங்கானு அருங்காட்சியகம்
மெராங் தீவு ரெடாங் தீவு

Friday, November 7, 2008

திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்

திரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.


மலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம்.

Tuesday, September 30, 2008

லெமாங் - ஆஹா என்ன ருசி!


மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.

லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.

பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.

மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.


மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??

ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.

“Selamat Hari Raya Aidilfitri"

Tuesday, August 26, 2008

திரெங்கானு பயணம் - 2

மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.



அடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.

திரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

Monday, August 25, 2008

திரெங்கானு பயணம் - 1


இரவு முழுவதையும் மின்னலுக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கும் இரையாக்கிவிட்டமையால் காலை வரை தூங்காமலே கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் (KLIA) கிளம்பி விட்டேன். KLIA செல்லும் வரை என் மூளைக்கு உறைக்கவே இல்லை ஒரு விசயம். KLIA ஒன்றும் எனக்குப் புதிதல்லதான். நெருக்கமான சில நண்பர்களை வழியனுப்ப வந்த நினைவுகள் இன்னமும் ஈரமாய் நெஞ்சில் உள்ளது. கூடவே அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், இனி எப்போது சந்திப்போம் என்று தெரியாமலே விடைப்பெற்ற தருணங்களும் இன்றும் நீக்கமற நிலைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பகாங் மாநிலத்திலுள்ள Kuala Tahan சென்றிருந்தப் போது அங்குள்ள தேசியப் பூங்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நண்பர்களுடன் Canopy Walk செல்ல முற்பட்ட போதுதான் ஒரு விசயம் உறைத்தது. உயரம்...ஆம் உயரம் 40 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கொண்ட தொங்கும் பாலத்தில் அந்தப் பூங்காவையே சுற்றி வர வேண்டும். அட இது என்ன பெரிய கம்ப சூத்திரமா சின்ன வயதில் வீட்டு மாமரம் ஏறிய நினைவில் சரியென்று ஏறியும் ஆகிவிட்டது. அதற்குப் பின்புதான் தெரிந்தது திரும்பிப் போக முடியாத ஒரு வழி தடம் அது என்று. உயிர் பற்றிய பயம் அப்போதுதான் முதன் முதலாகத் தோன்றி மறைந்தது. கண்ணை மூடிக் கொண்டே எப்படியோ கடந்து வந்ததெல்லாம் இன்னமும் மறக்காத நிலையில் மறுபடியும் அந்தரத்தில் மிதக்க வேண்டுமா? ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று உள்ளம் ஆர்ப்பரித்தாலும் வேறு வழியில்லை. இதற்கு முன் விமான பயண அனுபவம் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அமைதி காக்க வேண்டியிருந்தது. காலையில் விமான நிலையத்திற்குக் கிளம்பும் சமயத்தில் வானொலியில் Spanair Flight JK5022 விபத்துக்குள்ளான செய்தி திகிலைப் பரப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.


என்னத்தான் பயமென்றாலும் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை.? ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட! உயரமாவது பயமாவது! கிட்டதட்ட 50 நிமிட பயணங்களுக்குப் பிறகு கோலாத்திரெங்கானு விமான நிலையத்தை அடைந்தப் பொழுது அதன் அழகு உண்மையிலேயே எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டது. மலாய் பாரம்பரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் அவ்விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அதன் அழகிய தோற்றத்திற்கு மேலும் மெறுகூட்டுகிறது என்றால் மிகையில்லை. திரெங்கானு மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பு அண்மையில் வடிவமைக்கப்பட்ட பளிங்கு(படிகம்) மசூதி. இரவு நேர சூழலில் அதன் அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆற்றோரமாய் அமையப் பெற்றிருக்கும் இந்த மசூதி தாஜ்மகாலை நினைவுப்படுத்திச் செல்கிறது. அடுத்து திரெங்கானு மாநிலத்தில் அவசியம் காண வேண்டிய இடம் இஸ்லாமிய நாகரிக பூங்கா. தற்பொழுது இங்கு நடைப்பெற்றும் வரும் உலக திருக்குரான் ஓதும் போட்டி இன்றோடு ஒரு நிறவை எய்துகிறது.

திரெங்கானு மாநிலத்தின் மிகப் பெரிய சிறப்பு "Batik" துணி வகையாகும். மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் கிடைக்கப் பெறும் இந்த வகைத் துணிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமை பாத்தேக் துணி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

Monday, July 21, 2008

பிறந்தநாள் வாழ்த்தும் ஐம்பதாவது பதிவும்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழி மை ஃபிரண்டிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ஜில்லென்று ஒரு மலேசியா தளத்தின் ஐம்பதாவது பதிவும் ஆகும். வாழ்த்துப் பதிவாக அமைந்துவிட்டதில் மிக மகிழ்ச்சி.







அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட இப்பாடலை சமர்பிக்கிறோம்.







மாயாவி திரையில் இடம் பெற்ற 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலை போடலாம் என நினைத்தேன். அதில் ஜோதிகா கண்ணீர்விடும் காட்சி இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.


இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் மை ஃபிரண்ட் KFC வாங்கிக் கொடுப்பார்.

வாழ்த்து தெரிவித்தவர்கள்,

வலையுலக நண்பர்கள்.

பாரோ மன்னரின் மர்மக் கல்லறை - வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

நண்பர் விக்னேஷ்வரன் பாரோ மன்னரின் மர்மக் கல்லறை பற்றி எழுதிய கட்டுரை கடந்த ஜூன் 29-ஆம் தேதி மலேசிய நண்பன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. வாழ்த்துக்கள். ஏற்கனவே இவர் எழுதிய சிறுகதை கூட நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்போல் நிறைய அர்த்தமுள்ள கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுத நெஞ்சார வாழ்த்துகிறேன்.

இதோ அந்த கட்டுரையின் நகல்:

***பெரிதாய் பார்க்க****

Wednesday, May 14, 2008

செலாமாட் ஹாரி ஜாடி துர்கா


தங்கச்சி, இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ பிறார்த்திக்கிறேன். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! உனக்காக சிறப்பாக மலாயில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடலை பாடுகிறேன். :-)


Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi Thurgah
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, May 13, 2008

ஆசியாவின் இரகசியம்



'ஆசியாவின் இரகசியம்' என்று கருதப்படும் சரவா அல்லது சரவாக் (Sarawak) மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து விடுப்பட்டு உலக பார்வையை தன் வசம் கவர்ந்து வருகின்றது. கலை, கலாச்சாரம், இசை, மர்மம், சரித்திரம் என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக் கொண்டே போவது நமக்கொன்றும் ஆச்சரியமில்லைதான்.அதிலும் மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவா தீபகற்ப மலேசியாவைப் பிரிந்து போர்னியோ தீவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 131, 587 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள சரவா பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. சரவா மாநிலத்தின் தட்பவெப்ப நிலை வருட முழுவதும் 23 பாகை செல்சியஸிலிருந்து 32 பாகை செல்ஸியாகவே உள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு கடுமையான வெயிலாக இருந்தாலும் சுற்றிலும் அடர்ந்துள்ள காடுகள் கோடை வெப்பத்தின் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தியே வருகிறது. அத்தோடு 3300மி.மீட்டரில் இருந்து 4600 மி.மீட்டர் வரை இங்கு வருடம் முழுவதும் மழை பெய்வது விவசாயத்திற்கு மட்டுமல்லாது சூடான சீதோஷண நிலைக்கு பெரிதும் பங்காற்றுகிறது.
மனிதகுலத்தின் பொக்கிஷமான மழைக்காடுகளை(Rainforest) சூழ்நிலை மண்டலமாக கொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ்பெற்றதாகும். மிகவும் தொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியனரின் வாழுமிடமாக உள்ளது அதன் மற்றுமொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட், கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் மற்றும் பலர் அடங்குவர்.


வரலாறு
தொல்பொருளியலாளர்களின் ஆய்வின்படி புதிய கற்காலப் பண்பாடு இம்மாநிலத்தில் கி.மு 600க்கும் முன்பே தொடங்கி மனிதர்கள் நியாஹ் குகைகளில் (Niah Cave) வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற கோடாரி, கத்தி, சுத்தியல் போன்ற கற்கருவிகளைக் தொல்பொருளியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மேலும், சரவா மாநிலம் புருணை நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக வரலாறுகள் பகர்கின்றன. 1832 ம் ஆண்டுக்கு முன்பாகவே புருணை சுல்தான் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த ஷாரிப் சாஹாப் என்பவரை சரவா மாநிலத்திலுள்ள சுங்கை செக்ராங்கிற்கு மாவட்ட ஆட்சியாளராகவும் பின்பு சாடுங் மாவட்ட ஆட்சியாளராகவும் நியமித்தாக சான்றுகள் கூறுகின்றன. இதையடுத்து 1836-ல் பங்கேரான் மாகோத்தா என்பவரை புருணை சுல்தான் மாநில ஆட்சியாளராக அனுப்பி வைத்திருந்தார். அப்போது அம்மாநில மக்கள் டத்து பாத்திங்கி அலி என்பவரை தலைவராக கொண்டிருந்தனர். புதிதாக பதவியேற்ற பங்கேரான் மாகோத்தாவும் அவரது ஆட்களும் அம்மாநில மக்களிடம் புரிந்த அட்டூழியங்களை கண்டு சகிக்காத டத்து பாத்திங்கி அலி அம்மாநில மக்களின் ஒத்துழைப்போடு பங்கேரான் மாகோத்தாவை எதிர்த்துப் போரிட்டார். இந்நிலையை அறிந்த அப்போதைய புருணை சுல்தான் உமர் அலி சைபுடின் இப்பிரச்சினையை கையாள பங்கேரான் மூடா ஹாஷிம் என்பவரை அனுப்பி வைத்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பங்கேரான் மூடா ஹாஷிம் ஆங்கிலேய பிரபுவான ஜேம்ஸ் புரூக்கின் (James Brooke) உதவியை நாடினார். அதற்கு ஈடாக சரவா மாநிலத்தின் தற்போதைய தலைநகராக திகழும் கூச்சிங்கையும், செர்னியாவானையும் தருவதாக ஒப்பந்தமானது.


டிசம்பர் மாதம் 1840-ல் டத்து பாத்திங்கி அலி புரூக்கிடம் சமாதானம் கோரி சரணடைந்ததை தொடர்ந்து 24 செப்டம்பர் 1841இல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் இராஜாவாக நியமிக்கப்பட்டார். 11 மார்ச் 1868இல் ஜேம்ஸ் புரூக் தம்முடைய 65ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவரையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் புரூக் சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக பதவியேற்றார். இவருடைய ஆட்சியின்போதுதான் கூச்சிங் நகரம் ஆகஸ்டு மாதம் 1872இல் சரவாக்கின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று வரையிலும் இருந்து வருகிறது. சார்லஸ் புரூக்கை தொடர்ந்து அவருடைய மகன் சார்லஸ் வைனர் புரூக் 22 ஜூலை 1918இல் சரவாக்கின் மூன்றாவது இராஜாவாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1941இல் புதிய அரசியலமைப்பு சட்டத்தை சரவா மாநில அரசு அங்கிக்கரித்தது.

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, 105 வருட புரூக் குடும்ப ஆட்சிக்குப் பிறகு, 1 ஜூலை 1946இல் சரவா மாநிலம் அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது. அன்று முதல் சரவா மாநிலம் பிரிட்டிஷின் மகுடத்துவ காலணியாக 15 செப்டம்பர் 1963 வரை இருந்து வந்தது. 16 செப்டம்பர் 1963இல் சரவா, சபா, சிங்கப்பூர், மலாயா கூட்டமைப்புடன் இணைந்து மலேசியாவாக உருவெடுத்தது.

அரசியல்
சரவா ஆளுநரை மாநிலத் தலைமையாகவும் முதல்வரை மாநில அரசின் தலைமையாகவும் கொண்டுள்ளது. சரவாக்கின் முக்கிய பகுதிகளாக கூச்சிங், சிபு, ஸ்ரீ அமான், மீரி, லிம்பாங், சரிக்கி, சமரகான் மற்றும் பிந்துலு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 25 மாவட்டங்களும் 29 சிறுமாவட்டங்களும் அடங்கும். மாநில அரசாங்க ஆட்சி மையம் பெட்ரா ஜெயாவில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
வெட்டுமரத் தொழில் இம்மாநிலத்தின் முதன்மை தொழிலாகும். விவசாயம் இம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இம்மாநில மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவை நெல்பயிர், பால்மரம், செம்பனை, கருப்பு மிளகு, தென்னை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசியாகும். அதிலும் குறிப்பாக சமராகான் மற்றும் கலாக்கா சரிபாஸ்ஸில் அமைந்துள்ள மாபெரும் விவசாய திட்டத்தின் கீழ் 86000 ஏக்கரிலிருந்து 161000 ஏக்கர் வரை செம்பனை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசி பயிரிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் கலாச்சாரம்
பல்வேறு இனங்களை சரவா கொண்டிருப்பதால் கலை கலாச்சாரமும் பலவகையில் அமைந்துள்ளது. ஙஜாட் அலு, ஙஜாட் அரோ மற்றும் டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். விவசாயம் இம்மாநில மக்களின் முக்கியத் தொழில் என்பதால் சரவாக்கியர்கள் காவாய்(Gawai) பெருநாளை அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்று மாநில விடுமுறையாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பெரும்பான்மையான சரவாக்கினர் கைவினைத் தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இது இம்மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு வகை களிமண்ணால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவா ஜாடிகள்(Sarawak Vase) இங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
புவா (Pua) கைத்தறித் துணிகள் சரவா மக்களின் மற்றுமொரு சிறப்பாகும். இந்த புவா வகைத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் போன்ற இயற்கை பொருட்களை மூலதனமாக கொண்டுள்ளது. இவ்வகை துணிகளை முக்கியமான திருவிழாக்கள் மற்றும் திருமணத்தின்போது மட்டும்தான் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலாத்தலங்கள்
சரவா கலாச்சார கிராமம்(வாழும் அருங்காட்சியகம்)
17 ஏக்கர் நிலத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கிராமம் ஒட்டுமொத்த சரவா மாநிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மெலனாவ் இனத்தினரின் உயரமான வீடுகள், ஈபான், ஓராங் உலு மற்றும் பிடாயு இனத்தினரின் நீண்ட வீடுகள், பெனான் இனத்தினரின் குடில்கள் மற்றும் பல்வகை வீடுகளை இங்கு காண முடிகிறது. அத்தோடு பல்வகை கலாச்சார நடனங்கள், திருமண வைபவங்கள், ஆடல்கள் பாடல்கள், சிற்பக் கலைகளையும் இங்கு கண்டு மகிழலாம். பல்லின இசை அரங்கேற்றம் இங்கு நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றன. அதிலும் உள்ளூரின் சிறப்பு உணவுவகைகளை இங்குள்ள கடைகளில் அவசியம் வாங்கி சாப்பிட்டு மகிழ வேண்டும். பொதுவாகவே சரவா மாநிலத்திற்குச் சென்றவர்கள் இங்கு செல்லாமல் திரும்புவதில்லை.


தேசியப்பூங்காக்கள்
மழைக்காடுகளை சூழ்நிலைமண்டலமாக கொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப்பூங்காக்களைக் கொண்ட மாநிலமாக இந்த சரவா மாநிலம் திகழ்கின்றது. அதில் மூலு மலைத் தேசியப்பூங்கா, பாக்கோ தேசியப்பூங்கா, நியாஹ் தேசியப்பூங்கா, காடிங் மலைத் தேசியப்பூங்கா அதிக புகழ்பெற்றவையாகும். வருடந்தோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். இந்த பூங்காக்கள் 500க்கும் அதிகமான உயிரினங்களை வாழிடமாக கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதில் கிப்போன், ஓராங் ஊத்தான், மான் போன்ற விலங்குகளும் இம்மாநில சின்னமான ஹொர்ன்பில் பறவைகளை இங்கு அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான ரஃப்லேசியாவும்(Rafflesia)இங்குதான் உள்ளது.


சரவா அருங்காட்சியகங்கள்
சரவா மாநிலத்தில் மட்டுமே பதினொன்று அருங்காட்சியகங்கள் அமைந்திருப்பது இம்மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். அவை ஒருங்கே பழைய சரவா அருங்காட்சியகம், துங்கு அப்துல் ரகுமான் அருங்காட்சியகம், இஸ்லாமிய அருங்காட்சியகம், சீன அருங்காட்சியகம், நியாஹ் தொல்பொருள் அருங்காட்சியகம், லிம்பாங் அருங்காட்சியகம், பாராம் அருங்காட்சியகம், நெசவுத்துறை அருங்காட்சியகம், 'மியாவ்' பூனை அருங்காட்சியகம், வெட்டுமர அருங்காட்சியகம் மற்றும் பாறைநெய்(Petroleum)அருங்காட்சியகமாகும். பொது மக்களின் பார்வைக்காக வாரத்தின் ஏழு நாட்களும் இவை திறந்தே உள்ளன. அனைத்து அருங்காட்சியங்களுக்கும் நுழைவு இலவசமாகும்.

அஸ்தானா அரண்மனையும் மார்கரித்தா கோட்டையும்
சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக விளங்கிய சார்லஸ் புரூக்கால் 1879இல் இந்த மார்கரித்தா கோட்டை கட்டப்பட்டது. தன் மனைவி மார்கரித்தா இராணியாரின் பெயரையே இந்த கோட்டைக்கு சார்லஸ் சூட்டியிருந்தார். சரவா நதியையொட்டிள்ள இந்த கோட்டை பார்ப்பவர் மனதையும் கொள்ளைக் கொள்கிறது என்றால் மிகையில்லை. இந்தக் கோட்டைக்கு அருகே அஸ்தானா அரண்மனை அமைந்துள்ளது.
தற்போது மாநில ஆளுநரின்(யாங் டி பெர்துவான்) அதிகாரத்துவ இருப்பிடமாக விளங்கும் இந்த அஸ்தானா அரண்மனையும் சார்லஸ் புரூக்கால் கட்டப்பட்டதுதான். தங்களின் திருமண பரிசாக இந்த அரண்மனையை தன் மனைவிக்கு சார்லஸ் பரிசளித்திருந்தார். பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மாநில ஆளுநரின் வசிப்பிடமாக இன்றுவரை இருந்து வருகிறது.
கோவில்கள்
துவா பெக் கோங் சீனக் கோவில்
துங்கு அப்துல் ரகுமான் சாலையில் அமைந்திருக்கும் இக்கோவில் கூச்சிங்கிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோவில் 1843இல் கட்டப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமான குறிப்பேடுகளில் 1876 இல்தான் இக்கோவில் உருவாகியிருப்பதற்கான குறிப்புகளைக் காண முடிகிறது. இறந்தவர்களின் ஆவிகளைக் நினைவுக்கூறும் வாங் காங் திருவிழா இங்கு வெகுவிமரிசையாகக் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வாழவில்லையென்றாலும் கூச்சிங்கிலுள்ள பிள்ளையார் கோவிலும் மாரியம்மன் கோவிலும் இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்துக்களை அடுத்து சீனர்களும் இக்கோவில்களுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
உலக மழைக்காடு இன்னிசை விழா (Rainforest World Music Festival)


ஒவ்வொரு வருடமும் நடந்தேறி வரும் இந்த இன்னிசை விழா பதினொறாவது முறையாக இவ்வாண்டும் ஜூலை 11ஆம் நாள் தொடங்கி 13ஆம் நாள் வரை சரவா கலாச்சார கிராமத்தில் நடைப்பெறவுள்ளது. போர்த்துகல், கொங்கோ, இந்தியா, அங்கோலா, கொலும்பியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாலஸ்தீன், கிரிஸ், பிரேசில், போலந்து, அமெரிக்கா மற்றும் யு.கே என்று உலகின் பலதரப்பட்ட மூலையிலிருந்து வரும் இன்னிசைக் குழுக்கள் இந்த இன்னிசை விழாவில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 45இல் இருந்து 250 வரை விற்கப்பட்டும் வருகின்றது. ஆர்வமுள்ளவர்கள் இதற்காக இப்போதிலிருந்தே பதிந்தும் கொள்ளலாம்.
அவசியம் பார்க்க வேண்டிய வேறு சில இடங்கள்:
கூச்சிங்
சந்துபோங் மீன்பிடி கிராமம்
சாத்தோக் சந்தை
சிபு
சிபு சிவிக் செண்டர் அருங்காட்சியகம்
லெம்பாங்கான் சந்தை
ஏழு மாடி பகோடா
தங்க முக்கோணம்
ஈபான் நீண்ட வீடுகள்
பிந்துலு
பிந்துலு மசூதி
ஜேபாக் கிராமம்
குவான் யின் தோங் சீனக்கோவில்
சரவா விவசாய (அ) வேளாண்மை பூங்கா
தும்பினா பூங்கா
தஞ்சோங் பத்து கடற்கரை
கிடுரோங் கோபுரம்
மீரி
முதலை பண்ணை
பாறைநெய் அருங்காட்சியகம்
லுவாக் விரிகுடா
பெராயா கடற்கரை
ஹாவாய் கடற்கரை
மலர்தோட்டம்